ஜூன்-13, கோவை மாநகராட்சியில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
கோவையில் கடந்த ஐந்து நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடனடியாக அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், டெல்லியில் இருந்தபோதே தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறினார். இது வெறும் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 6 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பிரச்சனை அல்ல என்றும், 6 ஆயிரம் குடும்பங்களின் பிரச்சனை என்றும், தூய்மைப் பணியாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி எப்போதும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.
தங்களது உரிமைக்கு நியாயமான வகையில், அறவழி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை கைது செய்த காவல் துறையினருக்கு தனது கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்தார்.