ஒன்றுக்குப் பதிலாக இரண்டாய் கிடைத்த பொற்காசுகள்
திருப்பிக் கொடுக்க வந்த பெண்மணி
பெரியவாளின் ஆச்சர்யமான பதிலும்–அருளும்.
1971-ஆம் வருடம், மகாப் பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாண வைபோகம்தான்!
சாரி,சாரியாக (ஆமாம் புடவை,புடவையாகத்தான்) பெண்கள்.
சுவாஸினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு. சுமங்கலிகளுக்கு காமாட்சியம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார்கள் பெரியவாள். புடைவைத் தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும், இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்றுக்கொண்டு நகர்ந்து செல்கிறார்கள்,மாதரசிகள்
.
அந்தப் பெண்மணியின் புடைவைத் தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது.நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் – பார்க்கிறார் – வியக்கிறார்.
இரண்டு காசுகள்…..!
என்ன அதிருஷ்டம்! . இரண்டு பொற்காசுகள்..! தாமாகவே வந்தவை, திருடினேனா என்ன?..வேறு யாருக்குத் தெரியும்…?
மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.
பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.
என்ன?” என்ற ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.
“என் புடைவையில் ரெண்டு காசு வந்திருக்கு..எல்லோருக்கும் ஒண்ணொண்ணுதானே…அதான்….. இன்னொண்ணை…”
பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.
“ஒண்ணு உனக்கு…இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு…!”
அட, அப்படியா?
நான் கருவுற்றிருப்பதைப் பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே…பெரியவா எதிரில் அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்….
அப்புறம் என்ன?
ஏழு மாதங்களுக்குப் பின் இரட்டைக் குழந்தைகள்.
அம்மணியின் பேறு காலம், பெரும் பேறு காலம்!
குழந்தைகளுக்குக் கர்ப்பவாசம்,சொர்க்கவாசம்!
கணேச – சுப்பராமன்களான இரட்டையருக்கு, பெரியவாதான் உலகம்.
பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிக்கனிகளை வரவழைத்துக் கொடுத்தார். மகாப்பெரியவாள் தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.
சோடை போவார்களா,மக்கள்.
சொக்கத் தங்கமாக ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்களாகப், பணி செய்துகொண்டிருக்கிறார்கள், இன்றைக்கும்.