பிப்ரவரி-10, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் ரோஹித் அதிரடி சதத்தால் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். தொடக்க வீரர்களாக பில் சால்ட், பென் டக்கட் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். பில் சால்ட் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து பென் டக்கத்துடன், ஜோ ரூட் இணைந்தார் .
பென் டக்கட் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட்டும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ஹாரி புரூக் 31 ரன்களும், ஜாஸ் பட்லர் 34 ரன்களும், லிவிங்ஸ்டன் 41 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 49 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமான வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

ஹர்திக் பாண்டியா, முகமது சமி, ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 305 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இணை சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 7 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் விளாசி 90 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்.

சுப்மன் கில் 52 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். விராட் கோலி 5 ரன்களில் ஆட்டம் இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களில் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய அக்சர் பட்டேல் 41 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்திய அணி 44.3 ஓவர்களல் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடி சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.