ஜனவரி- 16, விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றாக டாக்கிங் செய்யும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகளை இன்று அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இரு செயற்கை கோள்களையும் இணைக்கும் ‘டாக்கிங்’ முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் செயற்கை கோள்களை விண்வெளியில் இணைத்த 3 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதனை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளன.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, விண்வெளியில் தனியாக நிலையம் அமைப்பது போன்ற அடுத்த கட்ட இஸ்ரோவின் திட்டங்களுக்கு இந்த வெற்றி மிகப் பெரிய உந்துதலாக அமையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வருங்கால விண்வெளி திட்டங்களுக்கான பாதையில் இது ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Congratulations to our scientists at @isro and the entire space fraternity for the successful demonstration of space docking of satellites. It is a significant stepping stone for India’s ambitious space missions in the years to come.
— Narendra Modi (@narendramodi) January 16, 2025
இந்த திட்டத்திற்காக ஸ்பேடக்ஸ்-1, ஸ்பேடக்ஸ்-2 ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்த செயற்கோள்கள் இரண்டும் சுமார் 450 கி.மீ.தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் 1.5 கி.மீ இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டன. பின்னர், அதன் இடைவெளி 15 மீட்டராகவும், அதனைத் தொடர்ந்து 3 மீட்டராகவும் குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சி கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. பின்னர், 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.