மே- 22, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்றும், ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் ரயில் சேவை, குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் வெறும் 22 நிமிடங்களில் 9 தீவிரவாத மூகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளமான ரஹீம் யார் கான் தற்போது ஐசியூ வார்டில் இருப்பதாகவும், பாகிஸதானின் பதில் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தியாவில் தாக்குதல் நடத்த நினைக்கும் அனைவருக்கும் இதேபோன்ற கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு சிந்துநதிநீர் பகிர்ந்து அளிக்கப்பட மாட்டாது என உறுதிபட தெரிவித்த மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக மட்டுமே இனி அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.